Friday, April 16, 2010

பைத்தியக்காரனின் புரிதல்..!


சிறு வயது நினைவுகளில் மூழ்கினான் பைத்தியக்காரன்....சின்னஞ்சிறு விரல்கள்,சிறிய கண்கள் ,சற்றே சிவந்த நிறம் என சிரித்த காலத்திற்குள் சிறகடித்தான் அவன்... அவனது புரிதல்கள் அப்போது முழுமையாய் இருந்தன... காரணம், முழுமை என்பதன் அர்த்தத்தை அவன் முழுமையாய் புரியாமல் இருந்தான்... புரியாததின் தொடக்கமே புரிதலின் முடிவாகிப் போயிருந்தது அவனுக்கு... அறியாமை அவனை முழுமையாக்கியிருந்தது...! அவனது தேடல்கள் யாவும், வேகமான வாகனம், வானவூர்தி, உயரப் பறக்கும் பட்டம், விருந்தினர் வருகை என அவனின் புரிதல்களின் எல்லைகளுக்குள் சுருங்கியிருந்தது...! முழுமை நோக்கி அவனது புரிதல் விரியத் தொடங்குகையில்... விரியும் எல்லைகளுக்கு போட்டியாய், கசங்கிய காகிதமாய் சற்றே தன்னை விரித்துக் கொண்டானே தவிர, முழுமையாய் தன்னை விரித்துக் கொள்ள முடியவில்லை...! தன்னை விரித்துக் கொள்ள தன்னால் முடியவில்லை என்றால்....? கேள்வி தன்னுள் எழுந்த போது அவன் மனித எல்லைகளை தாண்டத் தொடங்கியிருந்தான்....! தன்னால் விரியத் தானே முடியவில்லை, விடுவித்துக் கொள்ள முடியுமே... சின்னப் புன்னகையுடன் நடக்கத் தொடங்கினான் பைத்தியக்காரன்....!